Monday 2 July 2012

என் தென் தேச யாத்திரை

 நன்றி : திரு அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.com/2012/05/blog-post_3995.html
 ===================================================================

என் தென் தேச யாத்திரை

இது புகழ் பெற்ற பழைய தொடர் கட்டுரை ஒன்றின் தலைப்பு. தற்போது
( ஏப்ரல் 2012 - அதாவது இந்த கட்டுரை எழுதும் போது) ஜூனியர் விகடனில்
ஜி. ராமகிருஷ்ணன், எனது இந்தியா என்கிற தலைப்பில் எழுதி வருகிறார்
அல்லவா ! இதை போலவே, 1930 களில் சுதேசமித்திரன் இதழில் திரு.உலகநாத நாயகர் என்பவர் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இவர் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர். மேலும் வன்னியகுல க்ஷத்ரிய மகாசங்கத்திலும் சேவையாற்றி வந்தார். அவர் எழுதிய தொடர் கட்டுரையின் தலைப்பே எனது தென் தேச யாத்திரை. இந்த கட்டுரை தொடர் தனது எழுத்து பணிக்கு பெரும் தூண்டுதலாக இருந்தது என்று புகழ்பெற்ற சரித்திர நாவலாசிரியர் திரு .சாண்டில்யன் அவர்கள் புகழ்ந்து எழுதியதை எனது தந்தையார் கவிஞர் திரு.காவிரிநாடன் அவர்கள் உணர்வுபூர்வமாக குறிப்பிடுவார்.

ந்த படத்தில் இடமிருந்து மூன்றாவதாக அமர்ந்திருப்பவர் தான் திரு. உலகநாத நாயகர்.  படத்தில் உள்ள மற்றவர்களும் வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்திற்கு உழைத்தவர்களே.  1930 களில் இந்த நிழற்படம் எடுக்கப்பட்டது. ஸ்ரீ மான் "சம்புகுல வள்ளல்" சென்னை காட்டுப்பாக்கம் பா. ல. முருகேச நாயகரின் வாரிசு ஒருவரது  வீட்டில் இந்த படம் காணப்படுகிறது.   


சரி!இப்போது இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நானும் எனது மாப்பிள்ளை திரு. ஸ்ரீ விஜய் கண்டர் அவர்களும் சுமார் 12 நாட்கள் பயணம் செய்தோம். அந்த பயணத்தின் முக்கிய செய்திகளை விளக்குவதால் இந்த கட்டுரைக்கு "எனது தென் தேச யாத்திரை" என்று தலைப்பிட்டேன்.

இந்த பயணத்திற்கு இரண்டு நோக்கங்கள். ஒன்று மூன்றாயிரம் ரூபாய் விலையுள்ள "க்ஷத்ரியன்" இதழ் தொகுப்பை promote செய்வது. இரண்டாவது தென் மாவட்டங்களில் வன்னியர் நிலை பற்றி அறிந்து கொள்வது.




தென்காசியை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஒருவரது மகனும் அச்சக அதிபருமான திரு. வேல் முருகன் அவர்கள் இப் பயணத்திற்கு பெரிதும் துணையாய் இருந்தார். குற்றால அருவிக்கு அருகிலேயே அறையும் எடுத்து கொடுத்திருந்தார். அவரது உதவியுடன் தென்காசியில் வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிக்கு சென்று பார்த்தோம்.

தென்காசி நகரின் மீன் வியாபாரம் வன்னியர்கள் கையில் தான் இருக்கிறது. குறுகலான தெருக்களை கொண்ட சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் பகுதி இது. இந்த பகுதிக்குள்ளேயே சுமார் 10 கோவில்களும் இருக்கின்றன.

பொதுவாக தென் மாவட்டங்களில் வசிக்கும் வன்னியர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது. தென் பகுதி வன்னியர்களின் குல தெய்வ கோவில்களும் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இருக்கின்றன.










தென் பகுதி வன்னியர்கள், அவர்கள் மற்றும் அவர்களது முன்னோர்களின் நினைவுக்கு எட்டிய காலம் தொட்டு தென் மாவட்டங்களில் தான் வசித்து வருகின்றனர்.

நாதஸ்வரம், மிருதங்கம் வாசித்தல், இசைக்கலையை  கற்பித்தல் மற்றும் உள்ளூர் நீர் நிலைகளை குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்தல் ஆகியவை தொழிலாக இருந்துள்ளன.

படையாட்சி, அண்ணாவி (இந்த தெலுங்கு சொல்லுக்கு "வாத்தியார்" என்று அர்த்தமாம்), புலவர் போன்றவை அங்கு சாமானிய வன்னியர்களின் பட்டபெயர்களாக இருக்கின்றன. 

மேலும் சவளக்காரன்  என்றும் குறிப்பிடபடுகின்றனர். சவளம் என்பது வாள் போன்ற ஒரு ஆயுதம் என்றும் அதனை கொண்டு போரிட்டதால் தாங்கள் அந்த பெயரிலும் அழைக்கப்பட்டதாக தென் பகுதி வன்னியர்கள் கூறுகின்றனர்.

நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஊருக்கு ஓரிரண்டு வன்னியர் குடும்பங்களாவது வாழ்ந்து வருகின்றனர். கடையநல்லூர் புளியங்குடி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட ஏராளமான ஊர்களில் ஊருக்கு 100  குடும்பங்களுக்கு மேல் வன்னியர்கள வாழ்கின்றனர்.

குற்றாலத்தில் வன்னியருக்கு பாத்தியப்பட்ட மடத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது ...
 தமிழக அமைச்சராக இருந்த திரு. எஸ். எஸ். ராமசாமி படையட்சியாரின் பெயர் சொல்லும் கல்வெட்டு நெல்லை மாவட்டம் இடைகாலில் காணப்படுகிறது  

நெல்லை குமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள திசையன்விளை என்ற ஊரில் கூட 50 க்கும் மேற்பட்ட வன்னிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தென் பகுதி வன்னியர்களில் குமரி மாவட்ட வன்னியர்கள் நிலை வித்தியாசமானது .

1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநில பிரிவினையின் போது கேரள மாநிலத்தில் இருந்த நாகர் கோவில் , செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன. அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக வன்னியர் சமுதாய விடிவெள்ளிகளில் ஒருவரான திரு. அம்பாசங்கர் IAS அவர்கள் பொறுப்பேற்றார்.      
                    
 சமூக பற்று மிக்க அம்மேதை, தன் குல மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினார். கோட்டாறு, வடசேரி உள்ளிட்ட தற்போதைய குமரி மாவட்டத்தின் பலபகுதிகளில் வன்னியர்கள் வசிப்பதையும், தங்கள் பூர்வ பெருமை அறியாது உள்ளூர் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்ததையும் அறிந்தார்.

அவ்வன்னியர் வீடுகளில் இருந்துதான் அம்பா சங்கர் அவர்களுக்கு உணவு கொண்டு செல்லப்படும்.  நம் மக்களிடம், உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக அவர் இதனை செய்திருக்கவேண்டும்.

நம் மக்களை அரவணைத்தாலும் அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் அம்பா சங்கர் அவர்களுக்கு சிக்கல் ஏற்ப்பட்டது. நாகர் கோவில், செங்கோட்டை தாலுக்காக்களில் வன்னியர்களுக்கு சாதி சான்று வழங்குவதில் ஆவண ரீதியிலான முட்டுகட்டைகள் இருந்திருகின்றன.

எனவே, நம் மக்கள் உள்ளூர் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு அவர்களுக்கு "இந்து- பரதர்" என்று சாதி சான்று வழங்க வழி செய்தார்.

நாகர்கோவில் வடசேரியில் சுகம் மருத்துவமனை நடத்தி வரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் திரு. முத்துராமலிங்கம் அவர்களின் தந்தையார் இவர்.
  

ஆனால் இன்னொரு பின்னடைவு அவர்களுக்கு ஏற்ப்பட்டது. அவர்கள் வன்னியர்களே என்றாலும் சாதி சான்றிதழ் வேறாக இருப்பதால் வடமாவட்டங்களை சேர்ந்த வன்னியர்கள் பெண் கொடுக்கவோ எடுக்கவோ தயங்குகின்றனர்.

ஆனாலும் தாங்கள் வன்னியர்கள் என்பதை விளக்கி, தங்கள் நிலையை புரியவைத்து அரியலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வன்னியர்களிடம் குமரி மாவட்ட வன்னியர்கள் சம்பந்தம் செய்து உள்ளனர்.

குமரி மாவட்ட வன்னியர்களுக்கு, வன்னியரின் குல பெருமையும் உறவும் வேண்டும். அதே சமயம் பரதர் சான்றிதழின் மூலம் கிடைக்கும் சலுகையும் வேண்டும். இது கொஞ்சம் சிக்கலான நிலை தான்.

விருதுநகர் மாவட்டத்திலும் வன்னியர்கள் கணிசமாக வாழ்ந்துவருகின்றனர். வன்னியர்களுக்கு பாத்தியப்பட்ட பல கோவில்களையும் இங்கு காணலாம். ராஜபாளையத்தில் வன்னியர்களிடம் இருந்த திரௌபதி அம்மன் கோவில் எப்படியோ தெலுங்கு ராஜுக்கள் வசம் சென்று விட்டது.

ராஜபாளையத்துக்கு அருகில் தான் வன்னியர்களின் பெருமையை பறைசாற்றும் சிவகிரி அரண்மனை அமைந்துள்ளது. அந்த அரண்மனையில் தற்போது நீதி மன்றம் உள்ளிட்ட அரசு அலுவகங்கள் செயல்பட்டு வருகின்றன.     

சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த வீரபாண்டியன், ராஜபாளையத்தில் வணிகம் செய்து வருகிறார். அவரது வழிகாட்டலுடன் சிவகிரிக்கு சென்றோம். அரச பரம்பரையை சேர்ந்த சிலர் தேனீர் கடை நடத்தி வருகின்றனர். அவர்களை சந்தித்து அளவளாவினோம்.

வன்னியகுல க்ஷத்ரியர்களான சிவகிரி அரச வம்சத்தாருடன் நான். 

சிவகிரி அரச வம்சத்தாருடன் புளியங்குடியை சேர்ந்த திரு. லக்ஷ்மணன் படையாட்சியார் அவர்கள் 


சிவகிரி அரச வம்சத்தாருடன் தென்காசியை சேர்ந்த திரு. வேல்முருகன் படையாட்சியார் அவர்கள்  

சிவகிரி அரச வம்சத்தாருடன் திரு. ஸ்ரீ விஜய் கண்டர் அவர்கள் 


அப்போது இலை வாணியர் அல்லது சேனை தலைவர் என்று சொல்லப்படும் சமூகத்தை சேர்ந்த திரு. நல்லசிவம் அவர்கள் எதிரில் வந்தார். சிவகிரி வம்சம் மறவர் சமுதாயம் என்று பொய் பிரச்சாரம் செய்து வருபவர் இவர் தான். அவரோடு பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது. அப்போது எதிரிலேயே இருந்த சிவகிரி அரச வம்சத்து வாரிசுகள் தங்களை வன்னியர் என்று கூறினாலும், இல்லை இல்லை நீங்கள் மறவர் தான் என்றார் நல்லசிவம். அவருக்கு சிவகிரி வரலாற்றை நாம் விளக்கினோம்.

அதாவது வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பாண்டியர்களின் வாரிசுகளான சிவகிரி அரசர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். இதற்க்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. திருக்கைவளம், சிவகிரி காதல், சிவகிரி திக்கு விஜயம் போன்ற நூல்களும் கைபீதுகளும் ஆங்கிலேயர்களின் நூல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவகிரி அரசர்களின் பத்திரங்களும் அவர்களை "வன்னியகுல க்ஷத்ரியர்" என்றே கூறு கின்றன. அவ்வளவு ஏன் 23 .05 .2012  அன்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் (இதை தட்டச்சு செய்த நாள் 22 .05 .2012  ) சிவகிரியின் தற்போதைய ஜமீன்தார் ராஜா வ. சேவுக பாண்டிய சின்ன தம்பியார் என்ற விக்னேஷ் அவர்களின் சாதி சான்றிதழில் கூட "வன்னிய குல க்ஷத்ரியர்" என்று தான் உள்ளது.

சிவகிரி ஜமீன்தார் அனுப்பிய திருமண அழைப்பிதழ்
தற்போதைய சிவகிரி ஜமீன்தார் வன்னியகுல க்ஷத்ரியரான தெய்வ திரு. வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் அவர்களின் புதல்வன் என்ற செய்தி திருமண அழைப்பிதழின் உள்ளே இடம்பெற்றுருக்கிறது.

 

சிவகிரி அரசர்கள் "வன்னியகுல க்ஷத்ரியர்கள்" என்று கூறும் அவர்களது சொத்து பத்திரம்.
 
1925  ஆம் ஆண்டு மைனர் பாண்டியன் என்ற சிவகிரி ஜமீன்தார் காலமானார். இதனால் இதே ரத்த உறவை சேர்ந்த கல்வி அறிவு பெறாத வன்னியர் ஒருவரை உறவினர்கள் சிவகிரி ஜமீனாக நியமித்தார்கள். அவரோ சிங்கம்பட்டி மறவர் ஜமீனை சேர்ந்த பெண்ணை காதலித்து மணம் புரிந்தார்.

சிவகிரி வன்னியர் பாளையத்தின் ஐந்தாம் ஜமீன்தார் மைனர் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார்.

அரண்மனைக்கு ராணியாக வந்த அந்த மறவர் குல பெண்மணி, தன் வாரிசுகளுக்கு தன் சமூகத்தில் பெண் எடுக்க ஆரம்பித்தார். தற்போது ராணியாக இருக்கும் திருமதி. பால குமாரி நாச்சியார் அவர்கள் சேத்தூர் மறவர் ஜமீனை சேர்ந்தவர். பெண் எடுத்தது மறவர் சமூகத்தில் என்றாலும் சிவகிரி அரசர்கள் அனைவரும் வன்னியகுல க்ஷத்ரியர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

இன்றும் சிவகிரியை சுற்றி உள்ள பல கிராமங்களில் சிவகிரி அரச வம்சத்து வன்னியகுல க்ஷத்ரியர்களை காண முடிகிறது. சிவகிரி ஜமீன்தார் மைனர் பாண்டியனின் நினைவு நாளின் போது, சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த பலர் வன்னியர் சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர். இந்த செய்திகளை எல்லாம் நல்லசிவத்திடம் காரசாரமாக விவாதித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டாலும் நீண்ட நேரத்திற்கு மனம் அமைதி அடையவில்லை.

இதை போலவே, தென் மாவட்ட வன்னிய அரசர்கள் பற்றி விளக்கமாக எழுதவேண்டும். அதை வேறொரு சந்தர்பத்தில் பார்க்கலாம். 

திண்டுக்கல் மாவட்ட வன்னியர்களின் கதையோ வேறு. பெயர் தான் தென் மாவட்டமே தவிர வட மாவட்டங்களை போலவே வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி திண்டுக்கல்.

திண்டுக்கல், நத்தம் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை வன்னியர்களே நிர்ணயிக்கின்றனர். ஆனால் வன்னியர்கள், இந்து வன்னியர் - கிருஸ்தவ வன்னியர் என்று பிரிந்து கிடக்கின்றனர்.




2011  ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் பா ம க சார்பில் வன்னிய கிறிஸ்தவரான பால் பாஸ்கர் போட்டியிட்டார். இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர். இந்தியாவின் புகழ் பெற்ற தொண்டு நிறுவனம் இவருடையது. பசுமை வானொலி என்ற பெயரில் பண்பலை வானொலியும் நடத்தி வருகிறார். கல்லூரி அதிபருமான இவருக்கு அனைத்து சமூகத்தினர் மத்தியிலும் நல்ல செல்வாக்கு. ஆனாலும் தோற்று போனார். காரணத்தை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்.

திண்டுக்கல் வன்னிய கிறிஸ்தவரான பேராசிரியர் திரு. ரூஸ்வெல்ட் அவர்கள் எழுதிய நூல்.  

மேலே காணும் புத்தகத்தின் 59  ஆம் பக்கத்தில்...

இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பாலபாரதி
கன்னடக்காரர்.

எல்லா ஊரிலும் கம்யூனிஸ்ட் கட்சி மதத்துக்கு எதிரானது ஆனால் திண்டுக்கல் தேர்தலில் ஆர் எஸ் எஸ் அமைப்புடன் ரகசிய கூட்டணி சேர்ந்து கிருஸ்தவரான பால் பாஸ்கர் ஜெயிக்க கூடாது என்று பிரச்சாரம் செய்து ஓட்டை பிரித்து கோட்டைக்குள் இறங்கினார் பாலபாரதி.

தமிழனும் தோற்றான். வன்னியனும் தோற்றான்.        
                   
திண்டுக்கல்லில் மறக்கமுடியாத இன்னொரு மாமனிதர் வன்னிய கிறிஸ்தவரான அருட்தந்தை பாத்திமா நாதன். தவசிமேடை என்ற ஊரில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார். 70  வயதை கடந்த முதியவர். நாம் நேரில் சென்று பார்த்தபோது. ரத்த பாசத்தால் புளகாங்கிதம் அடைந்தார். நம்மை ஆசிர்வதித்தார்.

நாம் பார்த்ததில் தென் மாவட்டங்களிலேயே பிறந்து வளர்ந்த சில வன்னியர்கள் உயர் அதிகாரிகளாகவும் பணியாற்று கின்றனர். குறிப்பாக நெல்லை அண்ணா பல்கலை கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய காளியப்பன் குறிப்பிடதக்கவர். கடந்த 2010 ஆம் ஆண்டு அவரை அரசு விழா ஒன்றில் தி மு க சட்டமன்ற உறுப்பினரான மறவர் சமூகத்தை சேர்ந்த மாலைராஜா மேடையில் வைத்தே தாக்கினார். அப்போதைய
தி மு க அரசு இதை கண்டிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை. ஒட்டுமொத்த வன்னியர்களும் இதை ஒரு சம்பவமாகவே எடுத்து கொள்ளாத அவமானமும் அரங்கேறியது.

தென் மாவட்டங்களில் விரல் விட்டு என்ன கூடிய அளவிலேயே வன்னியர்கள் வாழ்க்கை தரத்தில் உயர்ந்து உள்ளனர். பெரும்பான்மை வன்னியர்களின் நிலை போதிய உயரத்தில் இல்லை.

மொத்தத்தில் திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வன்னியர்கள் அடியோடு இல்லை என்பதெல்லாம் பச்சை பொய்.

வட மாவட்டங்களில் வசிக்கும் முக்குலத்தோரை விட தென் மாவட்டங்களில் அதிக அளவில் வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதே மெய்.

   -நன்றி-        

இப்பயணத்துக்கு உற்ற துணையாய் இருந்த திரு. ஸ்ரீ விஜய் கண்டர், தவத்திரு. அன்னை சகுந்தலா அம்மையார்,  திரு. வேல்முருகன், திரு. இசக்கியப்பன், திரு. ஆறுமுக நயினார், திரு. அரிகரன், திரு. வி. எம். முருகன் , திரு. சாமித்துரை, திரு. சுரேஷ், திரு. செண்பகராஜ், 
திரு. வீரபாண்டியன் (ராஜபாளையம்), திரு. குருநாதன் (திசையன் விளை), டாக்டர். முத்துராமலிங்கம் (கன்னியாகுமரி), வழக்கறி ஞர் திரு. நவநீத கண்ணன்( மதுரை ), திரு. சண்முக சுந்தரத்தின் மாமனார் (திண்டுக்கல்),   திரு. மைகேல் டேவிட் (திண்டுக்கல்) மற்றும் இந்த வலைப்பூவை உருவாக்கி தட்டச்சும் செய்த திரு. அ.கார்த்திக் நாயகர் உள்ளிட்ட அனைவருக்கும்... 
 
 

No comments:

Post a Comment